கட்டுரைகள்
கண்ணகி மானுடப் பெண்ணல்ல கட்டுரைக்கு மறுப்பு - மரபின்மைந்தன் முத்தையா | தக்கயாகப் பரணி - கே.பி. அறிவானந்தம் | சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள் - நா. சோமசுந்தரம் | 2 ஆங்கில அதிகாரிகளின் ஊழல் - இடைப்பாடி அமுதன் | சத்தியசோதனை : நெகிழவைக்கும் நிகழ்வுகள் - சுகன்ய நிவேதிதா | கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியம் - சகோ. மார்கரெட் பாஸ்டின் | கொச்சி சமஸ்தானம் அன்றும் – இன்றும் - ஏ.எம். சாலன் | ஐன்ஸ்டீனும் ஆத்திச்சூடியும் வேண்டும் - மா. காமராஜ் | அன்னா அசாரேயின் முன்னோடி லோகநாயகர் ஜெ.பி. - ஜி.ஏ. வடிவேலுஆன்மிகங்கள்
கொங்கு முட்டம் குடமுழுக்கு - ஆர்.வி. | அருள்மிகு பஞ்சமுக ஆஞ்சநேயர் - எஸ், ஸ்ரீதுரை. | பச்சைமலையில் விநாயகர் திருத்தேர் வெள்ளோட்டம் - | சிவஞான போதம் 3 - முனைவர் ந.இரா. சென்னியப்பனார்ராசி பலன்கள்
இம்மாத ராசி பலன் - ஜோதிஷ ப்ரவீணா எம்.எஸ். சர்மாகவிதைக்கள்
ஜீவகாருண்யம் - வெ. ஜெயலட்சுமிவாசகர் கடிதங்கள்
வாசகர் கடிதம் -புத்தக மதிப்பீடுகள்
புத்தக மதிப்பீடு - எம்.எஸ்.சொட்டுநீர்ப் பாசனத்திற்கு மானிய மழை
தமிழ்நாடு மாநில முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் ஜெயலலிதா அவர்களின் புதிய ஆட்சி, ஏழு மாதங்களைக் கடந்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியும், பிற கட்சிகளும
- நா. மகாலிங்கம்மேலும்
- சொட்டுநீர்ப் பாசனத்திற்கு மானிய மழை - நா. மகாலிங்கம்
- கண்ணகி மானுடப் பெண்ணல்ல கட்டுரைக்கு மறுப்பு - மரபின்மைந்தன் முத்தையா
- தக்கயாகப் பரணி - கே.பி. அறிவானந்தம்
- சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள் - நா. சோமசுந்தரம்
- 2 ஆங்கில அதிகாரிகளின் ஊழல் - இடைப்பாடி அமுதன்
- சத்தியசோதனை : நெகிழவைக்கும் நிகழ்வுகள் - சுகன்ய நிவேதிதா
- கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியம் - சகோ. மார்கரெட் பாஸ்டின்
- கொச்சி சமஸ்தானம் அன்றும் - இன்றும் - ஏ.எம். சாலன்
- ஐன்ஸ்டீனும் ஆத்திச்சூடியும் வேண்டும் - மா. காமராஜ்
- அன்னா அசாரேயின் முன்னோடி லோகநாயகர் ஜெ.பி. - ஜி.ஏ. வடிவேலு
- முல்லைப் பெரியாறு அணையை உடைப்பது நியாயமா? - பி.சி.
- கொங்கு முட்டம் குடமுழுக்கு - ஆர்.வி.
- அருள்மிகு பஞ்சமுக ஆஞ்சநேயர் - எஸ், ஸ்ரீதுரை.
- பச்சைமலையில் விநாயகர் திருத்தேர் வெள்ளோட்டம் -
- சிவஞான போதம் 3 - முனைவர் ந.இரா. சென்னியப்பனார்
- இம்மாத ராசி பலன் - ஜோதிஷ ப்ரவீணா எம்.எஸ். சர்மா
- பெண் ஒன்று கண்டேன் - விமலாரமணி
- விபத்து - முனைவர் பஷீர் அஹ்மது ஜமாலி
- ஜீவகாருண்யம் - வெ. ஜெயலட்சுமி
- செல்வி ஷிவானியின் நடன அரங்கேற்றம் - நநி
- சோயாப் பணியாரம் - வி. ரமாதேவி

சொட்டுநீர்ப் பாசனத்திற்கு மானிய மழை
நா. மகாலிங்கம்தமிழ்நாடு மாநில முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் ஜெயலலிதா அவர்களின் புதிய ஆட்சி, ஏழு மாதங்களைக் கடந்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியும், பிற கட்சிகளும் ஸ்தம்பித்துப் போகும் அளவுக்குப் புதிய ஆட்சி துடிப்பாகச் செயல்பட்டு வருகிறது.
உதாரணமாக, இலங்கை அரசு மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்குமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். பிரதான எதிர்க்கட்சியும், பிற கட்சிகளும் இவ்வளவு எதிர்பார்க்கவில்லை.
முல்லைப்பெரியாறு அணையை உடைத்துவிட்டாலும், தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரைத் தருவோம் என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூறினார். உடனே தமிழக முதல்வர், அணையைப் பாதுகாக்க மத்திய தொழில் பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டும் என்றும், அணையில் 142 அடி வரை தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று அறிவித்தார். இக்கோரிக்கையினால் கேரள முதல்வர் அணையில் 120 அடி வரை தண்ணீர் நிரப்புமாறு வேண்டுகோள் விட நேர்ந்தது.
இதேபோல, கூடங்குளம் அணு மின்சக்தி உற்பத்தியை அப்பகுதிவாழ் மக்களின் அச்சத்தைப் போக்கிய பிறகே தொடர வேண்டுமென தமிழக முதல்வர் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார்.
முதல்வரின் நடவடிக்கை அணுஉலை மூடப்படத்தான் வேண்டும் என்பவர்களைக்கூட, நிதானமாகச் சிந்திக்குமாறு செய்துவிட்டது . இப்படிப் பல உதாரணங்களைப் பட்டியலிடலாம்.
விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், துணிச்சலாக நடவடிக்கை எடுக்கக் கூடியவர் தமிழக முதல்வர் என, எல்லா மாநிலங்களும் அவரைப் பற்றிப் பேசுகின்றன.
ஒவ்வொரு புதிய ஆட்சியும் தன் ஆட்சிக் காலத்தில், தான் பயணிக்கப் போகும் பாதை எது என்று சூசகமாகச் சுட்டிக்காட்டவே செய்யும்.
பிரபல கார் தொழிற்சாலைகளுக்கும், ஐ.டி. தொழில் நிறுவனங்களுக்கும் தடையில்லா மின்சாரத்தை அளித்தது சென்ற ஆட்சி.
இன்றைய புதிய ஆட்சி வேளாண் துறையை மறுமலர்ச்சி செய்வதற்கான நடவடிக்கைகளை அடுத்தடுத்துத் தொடர்ந்து எடுத்து வருகிறது.
மாண்புமிகு தமிழக முதல்வர், கிராமங்களில் 70 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்குப் பொருளாதார உதவியாக 4 ஆடுகள் அல்லது ஒரு குடும்பத்திற்கு ஒரு மாடு என வழங்கிட நிதிநிலை அறிக்கையில் ரூ. 2,191 கோடி ஒதுக்கினார்.
இதேபோல, தமிழ்நாட்டில் விவசாயப் பூமிகளின் சொந்தக்காரர்கள் தங்கள் விளைபொருள்களை மலிவான விலைக்கு விற்று நஷ்டமடைவதைத் தடுக்க நவீன வசதிகளுடன் கூடிய 50 குளிர்சாதனக் கிடங்குகளைக் கட்டித் தர ரூ. 82 கோடியை சென்ற நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்துள்ளார்.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ. 80 கோடி கடன் வ-ழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அத்தொகையில் டிராக்டர் முதலிய வேளாண் எந்திரங்களை வாங்கி அவற்றைக் குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு வழங்குமாறு தெரிவித்துள்ளார். காரணம், வேளாண் பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை உள்ளது.
தமிழ்நாடு மாநிலத்தை முதல் மாநிலமாக்க, முன்னுரிமை தந்து கவனிக்க வேண்டிய துறை, வேளாண் துறைதான் என்று தமிழக முதல்வர் இப்படிப் பல நடவடிக்கைகளை வேளாண்மை அமைச்சர் மாண்புமிகு எஸ். தாமோதரன் மூலமாக எடுத்து வருகிறார்.
தமிழ்நாட்டில் சென்ற பத்து ஆண்டுக் காலத்தில் ஏறக்குறைய 12.5 லட்சம் ஏக்கர் விவசாய பூமிகள் தொழில் நிறுவனங்களுக்கும் நகரமயமாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, 2012-இல் பூர்த்தியாகும் 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் சென்ற நான்காண்டு காலமாக ஏற்பட்ட வளர்ச்சி விகிதம் 0.69 சதவிகிதம்தான். அரசு விரும்பிய வளர்ச்சி விகிதமோ 4 சதவிகிதமாகும்.
நமக்குத் தேசியத் திட்டக் கமிஷன் ஒன்று உள்ளது. அதேபோல மாநிலத் திட்டக் கமிஷனும் இருக்கிறது. முதன் முதலாக மாநிலத் திட்டக் கமிஷன் உருவாக்கப்பட்டதை இத்தருணத்தில் நினைவுகூர விரும்புகிறேன். தமி-ழ்நாட்டின் மூன்று பெரிய பல்கலைக்கழகங்களின் மூன்று பொருளாதாரப் பேராசிரியர்களும், நான்காவதாக நானும் இடம்பெற்றிருந்த திட்டக் குழு அது.
மாநிலத் திட்டக் குழு, சுற்றுலாத் துறை, தொழில் துறை, விவசாயத் துறை எனப் பல்வேறு துறைகளில் செய்ய வேண்டிய அபிவிருத்திப் பணிகளைப் பட்டியலிட்டு அரசுக்கு அளித்தது.
தமிழகத்தில் மலர்ந்துள்ள அ.தி.மு.க. ஆட்சி, விவசாயத்தை விரைந்து விருத்தி செய்யத் தீர்மானித்ததற்கு ஏற்ப, மாநிலத் திட்டக் குழு மூலமே அதற்கான பணிகளைச் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. மாண்புமிகு தமிழக முதல்வர்தான் மாநிலத் திட்டக் குழுவின் தலைவராக உள்ளார். துணைத் தலைவர் சாந்தஷீலாநாயர், ஐ.ஏ.எஸ். கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி முதலிய இடங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாநிலத் திட்டக்குழு கூடி, விவாதங்களை நடத்தி, மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது. மாவட்டக் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் விவசாயிகள், தொழில் முனைவோர்கள், மாவட்ட, ஊராட்சிக் குழுத் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை அரசின் கவனத்திற்குத் தெரிவித்து வருகின்றனர்.
வரும் 2012 ஏப்ரலில், தொடங்க உள்ள 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழகத்தின் பொருளாதாரத் தேக்கநிலையை நீக்கி, வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்கு 10 சதவிகித வளர்ச்சி (G.D.P.) தேவை என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 10 சதவிகித வளர்ச்சியில் வேளாண் துறையின் வளர்ச்சி 4 சதவிகிதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சியை நிறைவேற்ற வேண்டுமானால், தமிழ்நாட்டின் உணவு உற்பத்தி இப்போதுள்ளதைப் போல இரு மடங்காக உயர்த்தப்பட வேண்டும்.
தற்போது நமது உணவுதானிய உற்பத்தி 1 கோடியே 15 லட்சம் டன்கள். அடுத்த ஆண்டு இந்த உற்பத்தியை 2 கோடியே 30 லட்சம் டன்களாகப் படிப்படியாக அதிகரித்தாக வேண்டும். இவ்வாறு உணவு தானிய உற்பத்தியை விவசாயிகள் இரண்டு மடங்காகச் செய்தால், அவர்களுடைய வருவாயும் இரண்டு மடங்காக உயரும்.
இதற்கு என்ன செய்வது?
மாநிலத் திட்டக் குழுவே சில முன்னுரிமைகளை வகுத்துள்ளது. தரிசு நிலங்களை மேம்படுத்துவது, பணப்பயிர்களை அதிகமாக உற்பத்தி செய்வது, கால்நடைகளை மிகுதியாக வளர்ப்பது, தீவனப் பயிர்களைச் சாகுபடி செய்வது என இடம்பெற்றுள்ள அப்பட்டியலில், நுண்ணீர்ப் பாசன முறையை அதிகப்படுத்துவதும் ஒன்றாகும்.
நுண்ணீர்ப் பாசனம் என்பது சொட்டுநீர்ப் பாசனமும் (Drip Irrigation), தெளிநீர்ப் பாசனமுமாகும் (Springler Irrigation).
விவசாயிகளுக்குப் பாசன வசதியைச் செய்து கொடுத்தால், அது அவர்களுக்குச் செய்யப்படும் கடன் வசதியைவிடப் பயனுடையதாகும்.
ஏனெனில், பாசன வசதி உள்ள பூமிகளில் தொடர்ந்து விவசாயமும் நடக்கும். தொடர்ந்து விளைச்சலும் கிடைக்கும். பாசனப் பற்றாக்குறை தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடிப்பதால், தமிழ்நாடு மாநில விவசாயிகள்தான் தொடர்ந்து சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள்.
கர்நாடகத்திலிருந்து வரும் காவிரி, கேரளாவிலிருந்து வரும் முல்லைப்பெரியாறு, ஆந்திராவிலிருந்து வரும் பாலாறு ஆகிய ஆறுகளின் தண்ணீரை, மூன்று தென்மாநிலங்களுமே தமிழகத்திற்குப் பங்கிட்டுத் தருவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
இப்பின்னணியால், தேசிய நதிகளை இணைப்போம் என்ற கோரிக்கை எழுந்தது. பின்னர் தென்னக நதிகளை இணைப்போம் என்ற கோரிக்கை எழுந்தது. கடைசியாக என்ன நடந்தது என்றால், மேதகு அப்துல் கலாம் அவர்களின் அறிவுரைப்படி தமிழக நதிகளை இணைக்கும் நடவடிக்கையாக மட்டுமே அது அமைந்துவிட்டது.
சென்ற அக்டோபர் மாதம் நதிகள் இணைப்புப் பற்றி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அவநம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
நதிநீர் இணைப்புத் தொடர்பான வழக்கு விசாரணையில் கருத்துக் கூறிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எஸ். கபாடியா அவர்கள், நதிநீர் இணைப்புக்காக அதிக நிதிச் சுமை அரசுக்கு ஏற்படுமானால், நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்காது என்று, விசாரணையின் போதே முன்தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.
இதன்மூலம், தேசிய நதிகளையோ, தென்னக நதிகளையோ இணைப்பது என்பதில் நிச்சயமில்லாத நிலைமைதான் நீடிக்கிறது. தேசிய நதிகளை இணைப்பதிலோ, தென்னக நதிகளை இணைப்பதிலோ மேலும் மேலும் காலதாமதம் ஆகுமானால், தமிழக அரசே ஒரு முதல் நடவடிக்கையை எடுக்கலாம். ஆந்திர அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, ஆந்திராவின் கோதாவரி நதிநீரை மட்டுமாவது, தமிழகத்தில் ஒக்கேனக்கல் – மேட்டூருக்கு மத்தியில் காவிரியாற்றில் இணைப்பது பற்றி இனியாவது சிந்திக்கலாம்.
ஆந்திராவின் தெலுங்கானா பகுதிக்கும் பாசன வசதியை விஸ்தரிக்க இத்திட்டத்திலேயே வழிவகுத்துவிடலாம். இப்பாசன நீர்த் திட்டத்திற்கு இரு மாநில அரசுகளும் பிரத்யேகமான ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளலாம். இதற்கு மத்திய அரசின் அனுமதியோ, அங்கீகாரமோ அவசியம் இருக்காது. நதிகளின் இணைப்பு இல்லாமல் தமிழக விவசாயத்திற்குப் பாசன வசதியை எப்படி அபிவிருத்தி செய்வது என்பதுதான் நம்முன்புள்ள முக்கியக் கேள்வியாகும்.
கடந்த 30 ஆண்டுக் காலமாக நான் கரும்பு விவசாயிகளின் கூட்டத்திலும், பலமுறை வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலும், அதனைவிட அதிகமாகப் பொது நிகழ்ச்சிகளிலும் ஒரு கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். தமிழ்நாடு மாநில விவசாயிகள் காவிரிப் பாசனத்தையோ, முல்லைப்பெரியாறு முதலிய மற்ற அணைகளின் பாசனத்தையோ மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல், ஒரு புதுவிதமான, புரட்சிகரமான பாசனமுறையை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி வந்திருக்கிறேன்.
அந்தப் பாசனமுறைதான் சொட்டுநீர்ப்பாசனமும், தெளிநீர்ப் பாசனமும். இந்த இரு பாசனமுறைகளில் சொட்டுநீர்ப் பாசனமுறையைக் கடைப்பிடித்தால், தற்போது தமிழ்நாட்டில் வாய்க்கால் பாசன முறையால் சாகுபடியாகும் 35 லட்சம் ஏக்கர் பூமிகளை, அதே அளவு பாசன நீரைக் கொண்டே 120 லட்சம் ஏக்கர்களில் சாகுபடி செய்ய முடியும். இவ்வாறு 120 லட்சம் ஏக்கராக நமது விவசாயப் பூமிகள் அதிகரிக்குமானால், உணவு தானிய உற்பத்தி 5 மடங்கு அதிகரிக்கும். அதுமட்டுமல்ல. 120 லட்சம் ஏக்கரில் 8 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். தமிழ்நாட்டில் உள்ள 1 கோடிக்கும் அதிகமான கால்நடைகளுக்குத் தீவனத்தையும் உற்பத்தி செய்யலாம். பால் உற்பத்தியும் உயரும். பால் உற்பத்தியில் மட்டும் 1.5 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கலாம்.
மொத்தத்தில் நமது கிராமப் பொருளாதாரமே முழுவதுமாக மாறும்.
நீர்மேலாண்மை விஞ்ஞானிகளின் கருத்துப்படி, ஒரு கியூசெக் பாசன நீரைத் தெளிநீர் முறையில் விவசாயப் பூமியில் சாகுபடி செய்தால் 80 ஏக்கருக்கும், சொட்டுநீர் முறையில் விவசாய பூமியில் செய்தால் 100 ஏக்கருக்கும், தோட்டக்கலை பூமிகளில் 200 ஏக்கருக்கும் உபயோகிக்கலாம் என்கிறார்கள். தமிழக அரசு சென்ற நவம்பர் மாதம் இந்தப் பாசன முறையை விவசாயிகள் வரவேற்கும் முறையில் ஒரு கவர்ச்சிகரமான திட்டமாக அறிவித்திருக்கிறது.
அதன்படி, விவசாயிகள் சொட்டுநீர்ப் பாசன முறைக்கு மாறினால், அவர்களுக்கு 100 சதவிகிதம் மானியம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பழைய நீர்ப்பாசன முறைகளின் மூலம் அதிக மகசூலை உண்டாக்க முடியாது. இப்புதிய பாசனமுறை மகசூலையும் அதிகரிக்கிறது, அதேசமயம் பாசனநீரையும் குறைவாகப் பயன்படுத்த உதவுகிறது. இத்திட்டத்தின்படி, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்ல. இத்திட்டத்தில் பெண் விவசாயிகள், ஆதி திராவிடர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இந்த மானியத்தை வழங்குவதில் தமிழக அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த ஆண்டு சிறு, குறு விவசாயிகளுக்கு 60 ஆயிரம் ஏக்கர் வரை மானியம் தர இலக்கு நிர்ணயித்துள்ளது. மற்ற விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ஏக்கர்தான் இலக்கு. 2 1/2 ஏக்கர் வைத்திருந்தால் குறு விவசாயி. 5 ஏக்கர் என்றால் சிறு விவசாயி. குத்தகை விவசாயிகளுக்கும் இந்த மானியம் தரப்படும். ஏக்கருக்கு அதிகபட்ச மானியம் ரூ. 43,816 வழங்கப்படும்.
விவசாயிகள் பாசனக் கருவிகளைத் தாங்கள் விரும்பும் நிறுவனங்களிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம். அந்த உபகரணங்களை 3 ஆண்டுகளுக்கு விவசாயிகள் பராமரிக்க வேண்டும்.
இத்தனை மானியங்களுடன், விவசாயிகளுக்கான கையேடு ஒன்றையும் தமிழக அரசு தருகிறது.
இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தமிழக விவசாயிகள் பழைய பாசன முறையிலிருந்து புதிய முறைக்கு மாற வேண்டும். பாலைவனப் பகுதியிலுள்ள இஸ்ரேல் என்ற தேசம் 1947 வரை இல்லை. 1948-இல்தான் உருவாக்கப்பட்டது. அப்போது இஸ்ரேல் வெறும் பாலைவனப் பிரதேசம்.
இப்போது அங்கு மாடமாளிகைகள், வியாபாரக் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் என எல்லாமே உருவாகிவிட்டன.
பாசன வசதியோ மிகக் குறைவு. ஏரி ஒன்றிலிருந்து கொண்டுவரப்படும் குடிநீரைப் பயன்படுத்தியபின் வெளிவரும், கழிவுநீரைச் சுத்திகரித்து அந்த நீரையே விவசாயத்திற்கும் பயன்படுத்துகிறார்கள்.
ஆச்சரியம என்னவென்றால், அந்த இஸ்ரேல்தான் பழ உற்பத்தி, பூ உற்பத்தி ஏற்றுமதியில் உலகில் முன்னணியில் இருக்கிறது.
சொட்டுநீர்ப் பாசனத்திற்கு நிதர்சன உதாரணமான பாலைவன தேசமான இஸ்ரேல், நம் கண் முன்னால் இருந்தும்கூட, இந்திய விவசாயிகள் அதைப் பற்றிப் பாராமுகமாக இருந்துவிட்டது மிகப் பெரிய தேசிய இழப்பாகும்.
பாரம்பரியமாக விவசாய தேசமான இந்தியாவில்தான், சென்ற 10 ஆண்டுக் காலத்தில் 2 1/2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். சொட்டுநீர்ப் பாசனமுள்ள இஸ்ரேலில் இந்தச் சோகம் சம்பவிக்கவில்லை.
சொட்டுநீர்ப் பாசனமுறைக்கு மாறுமாறு மானியம் கொடுத்து விவசாயிகளைத் தூண்டிவிட்டிருக்கிற தமிழக முதல்வரை, விவசாய சமூகம் தலைமுறை தலைமுறையாக நன்றியோடு பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது.
மாநில அரசின் இந்த மானிய அறிவிப்பு ஒரு மகத்தான வரலாற்றுச் சாதனையாகும். சத்துணவுத் திட்டம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குப் புகழ் தேடிக் கொடுத்ததுபோல, சொட்டுநீர் மானியம் மாண்புமிகு தமிழக முதல்வருக்குப் புகழ் தேடித் தருவது உறுதி.
கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியம்
சகோ. மார்கரெட் பாஸ்டின்கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியம் பற்றி சகோதரி மார்கரெட் பாஸ்டின் எழுதியுள்ள இக்கட்டுரை கவியரசு அவர்கள் இயேசுநாதர் மீது கொண்ட பக்தியையும் ஈடுபாட்டையும் பறைசாற்றுகிறது. இதே கவியரசு அவர்கள்தான் இன்றுவரை பல பதிப்புகளைக் கண்டுவரும் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற சிறப்பான நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்து மதத்தையும், கிறிஸ்துவ மதத்தையும் ஒரே கவிஞரால் போற்றிப் பாராட்டும் வகையில் எ-ழுத முடிகிறது என்றால், அவர் இன்னும் சில காலம் வாழ்ந்திருப்பாரேயானால், நபிகள் நாயகத்தைப் பற்றியும் நற்றமிழ்க் காவியத்தை எழுதியிருப்பார். மேலும்
முல்லைப் பெரியாறு அணையை உடைப்பது நியாயமா?
பி.சி.116 ஆண்டுகளைக் கடந்துவிட்ட முல்லைப் பெரியாறு அணை, இந்தியாவில் 200 ஆண்டுக்கால பிரிட்டிஷ் ஆட்சியில், பென்னி குயிக் என்ற ஒரு வெள்ளைக்கார ராணுவ அதிகாரி கட்டிய அணை. மேலும்
நகைத் தொழிலாளர்கள் சிரிப்பது எப்போது?
நேர்காணல்நம் நாட்டு மக்கள் தங்க நகைகள் அணிவதில் மிகுந்த விருப்பமுடையவர்கள். காதில் தங்க நகை அணிவதற்காகக் காதணி விழா என்னும் விழாவையே நடத்துகிறோம். மேலும் பூப்பு நன்னீராட்டு, திருமணம், வளைகாப்பு என ஒவ்வொரு விழாவிலும் தங்க நகைகளே சிறப்பிடம் பெறுகின்றன.
சுரங்கங்களிலிருந்து தாதுவாக வெட்டியெடுக்கப்பட்டுச் சுத்திகரிக்கப் பட்டு வரும் தங்கக் கட்டிகள் தங்க நகைகளாக உருமாற்றம் பெற, தங்க நகைத் தொழில் செய்யும் கைவினைக் கலைஞர்களால் பல்வேறு வேலைகள் செய்யப் படுகின்றன.
கட்டித் தங்கத்தை நகைகளாக மாற்றும் தங்க நகைத் தொழிலாளர்கள் தமிழகத்தில் இன்று பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். தங்கம் நகையாக உருமாறும் தொழில் பற்றியும், தங்க நகைத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் பற்றியும் ஓம் சக்தி வாசகர்களுக்குத் தெரியப்படுத்த தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் திரு. சி. ரங்கராஜன் அவர்களை அணுகினோம். அவர் அளித்த
கேள்வி: தமிழ்நாட்டில் தங்க நகைத் தொழில் எங்கெங்கு சிறப்பாக நடைபெறுகிறது?
பதில் : தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தங்க நகைத் தொழிலில் முதலிடம் வகிப்பது கோவை மாநகரம்தான். இந்தியாவில் மும்பை முதலிடத்திலும், கோவை இரண்டாமிடத்திலும் உள்ளன. அதற்கடுத்து சென்னை, திருச்சி, சேலம், மதுரை, நகரங்களில் இத்தொழில் நடைபெறுகிறது. நகை விற்பனையில் சென்னை மாநகரம் தமிழ்நாட்டில் முதலிடம் வகிக்கிறது.
கேள்வி : இத்தொழிலில் எத்தனைபேர் ஈடுபட்டுள்ளனர்?
பதில் : கோவையைப் பொறுத்தவரை இத்தொழிலில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் அதாவது சுமார் 40 ஆயிரம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு மாநில அளவில் சுமார் 1 லட்சம் பேர் இத்தொழில் செய்கிறார்கள்.
கேள்வி : தங்கம் இறக்குமதி எப்படிச் செய்யப்படுகிறது?
பதில் : அரசாங்கம்தான் செய்கிறது. அரசாங்கம் மட்டுமின்றி மும்பையிலுள்ள புல்லியன் வியாபாரிகள் சங்கம் என்ற அமைப்பும் இறக்குமதி செய்கிறது. இவர்கள் தங்கத்தைக் கட்டிகளாக வாங்கி விற்பனை செய்கிறார்கள். நகைகளாகச் செய்வதில்லை. இப்போது வங்கிகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றன.
கேள்வி : தங்க நகைகள் இங்கிருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றனவா?
பதில் : வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து நகைகள் ஏற்றுமதி செய்யப் படுகின்றன. வெளி மாநிலங்கள் என்று பார்த்தால் முதலிடம் வகிப்பது மும்பை மாநகரம்தான். வெளிநாடுகள் ஏற்றுமதிக்கு அதற்கென உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்கள் மூலமாகப் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
கேள்வி : ஒரு நகையை ஒரே இடத்தில் ஒருவரே செய்து விடுகிறாரா?
பதில் : ஒரே இடத்தில் செய்யப்படுவதில்லை. முதலில் தேவையான வடிவங்களாக டையிங் இயந்திரத்தில் டையாக அச்சுச் செய்து தருவார்கள். அதை வாங்கி வந்து நகையாக உருக்குவார்கள். டை கடை, கம்பிக்கடை, செதுக்குப் பட்டறை, மெருகுக்கடை ஆகிய இடங்களுக்குச் சென்றுவந்தே ஒரு நகை உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆபரணத்திற்கும் ஓரிடம் உண்டு. ஒரே ஆள் எல்லா நகைகளையும் செய்வதில்லை.
கேள்வி: இதற்கான இயந்திரங்கள் எத்தனை பிரிவாக உள்ளன?
பதில் : தொடக்கமாக அச்சு இயந்திரங்கள். அதற்குப் பின் தகடு இழுப்பது, கம்பி இழுப்பது, பாலிஷ் செய்வது, பட்டை செதுக்குவது, எனாமல் செய்வது எனப் பல வகை இயந்திரங்கள் உள்ளன.
கேள்வி : வெளியாட்களின் வருகை இங்குள்ளோரை தொழிலில் எந்த அளவுக்குப் பாதித்துள்ளது?
பதில் : நிறையப் பாதித்துள்ளது. வெளி மாநிலங்களில் குறிப்பாக மேற்கு வங்கம், ஒரிசா, பீகார் மற்றும் அண்டை நாடான பங்களாதேசம் ஆகிய இடங்களிலிருந்து இங்கு வந்து தங்க நகைத் தொழில் செய்கிறார்கள். அங்கெல்லாம் ஒரு நாளைக்கு ரூ. 50 வருமானத்திற்குக்கூட வழியில்லாத நிலையில் இங்கே வந்து மிகக் குறைந்த கூலிக்குப் பணி செய்கிறார்கள். இதனால் எங்களுக்கு இத்தனை நாள் கிடைத்துவந்த கூலி மிகவும் பாதித்து விட்டது. இத்தொழிலில் மட்டுமல்ல. கட்டடத் தொழில், தச்சுத் தொழில் எனப் பல தொழில்களிலும் வெளி மாநிலத்தவரால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இத்தொழிலில் ஒருவரை நம்பி ஒரு குடும்பம் இருந்த நிலை மாறிவிட்டது. இத்தொழிலை விட்டு வேறு தொழில்களுக்குச் செல்லும் நிலையும் ஏற்பட்டு விட்டது.
கேள்வி : இத்தொழிலில் ஒரு தொழிலாளிக்கும், ஒரு முதலாளிக்கும் என்ன வருமானம் கிடைக்கும்?
பதில் : முன்பு போல் பட்டறை அதிபர்கள் லாபம் சம்பாதித்துக் கொண்டு தொழிலாளிக்குக் கூலி தரும் நிலைமை இப்போது இல்லை. இப்போது ஒருவர் நான்கு பேரை வைத்து வேலை செய்தால், அவரும் அவர்களுடன் உட்கார்ந்து வேலை செய்து அவர்களின் கூலியையே பெறுகிறார். அப்படி உட்கார்ந்து வேலை செய்யாத நிலையில் அந்தச் சம்பளம் கூடக் கிடைக்காது.
இப்போது ஓர் ஆளுக்கு ஒரு நாளைக்கு ரூ. 300 மட்டுமே கூலி கொடுக்க முடிகிறது. இது இப்போதைய விலைவாசி ஏற்றத்தில் நகர வாழ்க்கைக்குப் போதாததாகவே இருக்கிறது. இதுவும் கொடுத்துக் கட்டுபடியாவதில்லை. மேலும் வேலை இல்லாத நேரங்களில் இதுவும் கிடைக்காமல், தொழிலாளர்கள் கடன் வாங்கும் சூழ்நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். எனவே இத்தொழில் நலிந்து வருகிறது. கட்டடத் தொழிலாளர்கள், தச்சுத் தொழிலாளர்களெல்லாம் ஒரு நாளைக்கு ரூ. 600/& வரை ஊதியம் பெறுகிறார்கள். ஆனால், மிகுந்த விலை மதிப்புள்ள தங்கத்தில் நுணுக்கமான வேலைகளைச் செய்யும் நகைத் தொழிலாளர்கள் குறைவான கூலியையே பெறுவது வேதனையானது.
கேள்வி : நகை வடிவமைப்பு என்பது நகைத் தொழிலாளியின் கற்பனையா? அல்லது நகை செய்யக் கொடுப்பவர் தரும் வடிவமைப்பா?
பதில் : இரண்டுமே உள்ளன. வேலை செய்பவர்களும் தங்கள் கற்பனையில் வடிவமைப்பார்கள். வியாபாரிகளும் வடிவமைப்பைச் சொல்லி அதன்படி செய்து தரக் கேட்பார்கள். சில வேளைகளில் நகையை வாங்கும் பொது மக்களும் மாறுதல்கள், திருத்தங்கள், புதிய வடிவங்கள் செய்து தரச் சொல்லிக் கேட்பார்கள். கேட்பதற்கேற்பச் செய்து தருவார்கள். ஏற்கனவே நாங்கள் செய்து தந்த வடிவங்கள் கடைகளில் இருக்கும். அவற்றைப் பார்த்து அவற்றில் ஏதேனும் மாறுதல்கள் சொன்னால் அவ்வாறு மாறுதல்கள் செய்தும் தருவார்கள்.
கேள்வி : நகையின் தரம் எப்படிக் கணக்கிடப் படுகிறது?
பதில் : நகையின் தரம் தொடர்பாக முன்பிருந்த சந்தேகங்கள் இப்போது நூற்றுக்கு நூறு இல்லாமல் போய்விட்டன. இப்போதைய நகைத் தொழில் நூற்றுக்கு நூறு உத்தரவாதமானதாக மாறியுள்ளது. இதற்குப் பொது மக்களின் விழிப்புணர்ச்சியும், அரசாங்கத்தின் சட்டமும் காரணங்களாகும்.
இப்போது கொண்டுவரப்பட்டுள்ள ஹால்மார்க் தரக் கட்டுப்பாட்டின்படி ஒரு குன்றிமணி அளவு கூட கலப்படம் செய்ய முடியாது. 916 தரத்தில் நகைகள் செய்யப்படுகின்றன. BIS (Bureau of Indian Standard) என்னும் தரக் கட்டுப்பாடு அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பில் உரிமம் பெற்று, தரச் சான்று கொடுக்கக் கூடிய ஹால் மார்க் மையம் உள்ளது.
செய்யப்படும் ஒவ்வொரு நகையும் அந்த ஹால்மார்க் மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப் படுகின்றன. அங்கே தரம் பரிசோதிக்கப்பட்டு, தரமானதாக இருந்தால் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வைத்துத் தரப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு ஒரு விழுக்காடு கூட மாற்றுக் குறைவான நகை கிடைக்க வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.
இதில் தங்கநகைத் தொழிலாளிக்குள்ள ஒரு சிக்கலையும் கூற வேண்டியுள்ளது. இந்த 916 தரத்தில் நகைகள் செய்ய சேதாரம் மிக அதிகம். ஆனால் அந்த அளவுக்குச் சேதாரம் கொடுக்கப் படுவதில்லை. இது இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், தொழிலும் நலியக் காரணமாக உள்ளது.
முன்பு, செய்த பொடி கலந்த நகைகளில் சேதாரம் குறைவு. அவற்றைச் செய்வதில் தொழிலாளர்களுக்கு லாபம் கிடைக்கும். இப்போது உற்பத்திச் செலவு அதிகம். அதை நகை வியாபாரிகள் கொடுப்பதில்லை. அவர்கள் வியாபாரப் போட்டியைக் காரணம் காட்டித் தர மறுக்கிறார்கள். செய்கூலி, சேதாரம் இல்லை என விளம்பரம் செய்கிறார்கள். அப்படி விளம்பரம் செய்வதே தவறு. அதை மக்களும் நம்புகிறார்கள்.
இப்போது 100 கிராம் தங்கத்தைக் கொடுத்து ஒரு தொழிலாளியிடம் நகை செய்யச் சொன்னால், அதற்கு 8 முதல் 10 கிராம் வரை சேதாரம் கொடுத்தால்தான் கட்டியாக உள்ள தங்கத்தைத் தகடாக, கம்பியாக மாற்றி, பிற உப தொழில்களையும் செய்து முழுமையான நகையாக்கித்தர முடியும். ஆனால், சேதாரம் மிகக் குறைவாகக் கொடுப்பதால் இப்போது லாபமே கிடைக்காத சூழ்நிலையே நிலவுகிறது.
கேள்வி : ஒரு நகை எத்தனை நாள்களில் செய்து முடிக்கப்படுகிறது?
பதில் : அது வடிவமைப்பைப் பொறுத்தது. எந்த நகை வேண்டுமோ அதற்கேற்பக் கால அளவு வேறுபாடுகள் இருக்கும்.
கேள்வி : தங்க நகை செய்யப் பொதுமக்கள் உங்களை நேரடியாக அணுகுகிறார்களா?
பதில் : இப்போது அந்த நிலை இல்லை. பொதுமக்கள் நகைக்கடைகளை அணுகுகிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் எங்களுக்குப் பணிகள் கிடைக்கின்றன. பொதுமக்கள் ஒன்று, இரண்டு தருவார்கள். வியாபாரிகள் மொத்தமாகத் தருகிறார்கள்.
கேள்வி : வியாபாரிகள் உங்களிடம் நேரடியாகத் தருகிறார்களா?
பதில் : நேரடியாகத் தருவதைவிட, இடைத் தரகர்கள் மூலம்தான் அதிகம் தருகிறார்கள்.
கேள்வி : ஒரு பட்டறையில் குறைந்த பட்சம்- அதிக பட்சம் எத்தனை பேர் வேலைக்குத் தேவைப் படுவார்கள்?
பதில் : குறைந்தது இரண்டு பேர் அல்லது மூன்று பேர் தேவைப் படுவார்கள். அதிக பட்சமாகப் பத்துப்பேர் அல்லது பதினைந்து பேர் கூடச் சேர்ந்து வேலைகள் செய்வார்கள். அது அவர்களுக்கு வரக்கூடிய வேலைவாய்ப்பைப் பொருத்தது.
கேள்வி : இயந்திரங்களும், தொழில் நுட்பங்களும் இந்தத் தொழில் வளர்ச்சிக்கு எந்த அளவு உதவுகின்றன?
பதில் : இயந்திரங்களின் வருகை தொழிலை விரைவாக முடிப்பதற்கும், அதிகமாகச் செய்வதற்கும் உதவியுள்ளன. ஆனால், பெரிய பஞ்சாலைகள் எப்படிக் கைத்தறித் தொழிலை நலியச் செய்தனவோ, அதேபோல இயந்திரமயமாக்கல் குடிசைத் தொழிலாக இருக்கும் இத்தொழிலை நலியச் செய்யும் என்பதே உண்மை.
இப்போது இத்தொழிலிலும் பெரிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டு விட்டன. இயந்திரமயமான அந்தத் தொழிற்சாலைகளில் குறைந்த கூலியில் வெளிமாநிலப் பணியாளர்களைக் கொண்டு நகைகள் செய்யப் படுகின்றன. அவர்களோடு குடிசைத் தொழிலாளிகளான நாங்கள் போட்டி போட இயலவில்லை.
கேள்வி : உங்கள் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வாரியம் ஏதேனும் அமைத்துள்ளதா? நலத்திட்ட உதவிகள் ஏதேனும் செய்யப்படுகின்றனவா?
பதில் : அரசு ஒரு நலவாரியம் அமைத்துள்ளது. ஆனால் எந்தச் செயல்பாடும் இதுவரை இல்லை. அதன் பயன்களை இதுவரை யாரும் அனுபவித்ததாகத் தெரியவில்லை. பெயரளவில்தான் அது இருக்கிறது. எங்கள் தொழிலாளர்களுக்கோ, அவர்கள் குடும்பத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கோ எந்த உதவியும் செய்யப்படவில்லை. வீடு, வீட்டுமனை, மருத்துவம், குறைந்தபட்சக் கூலி நிர்ணயம் என எதுவும் செய்து தரப்படவில்லை.
கேள்வி : ஒரு நகைப் பட்டறை வைக்கக் குறைந்தது என்ன முதலீடு தேவைப்படும்?
பதில் : சாதாரணமாக 2 அல்லது 3 பேர் பணி செய்யும் பட்டறை தொடங்க இன்றைய நிலையில் இடம், இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவற்றிற்குக் குறைந்தது 5 லட்சம் ரூபாய் தேவைப்படும்.
கேள்வி : உங்களது தொழிலுக்கு மின் கட்டணம் எப்படி வசூலிக்கப் படுகிறது? பதில் : எங்களுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்த குடிசைத்தொழில் என்ற அளவில் வீடுகளுக்குப் பயன்படுத்தும் கட்டணமாக வசூலிக்குமாறுதான் அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால் மின்சார வாரியம் வர்த்தகப் பிரிவில்தான் வசூலிக்கிறது. மின்வாரியப் பொறியாளரிடம் அரசாங்க ஆணையைக் காட்டிப் பேசியும் அவர்கள் உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. நாங்கள் மோட்டார் வைத்துச் செய்யப்படும் வேலைகளுக்குக் கட்டணச் சலுகை கேட்கவில்லை. தொழில் செய்வதற்கு விளக்கெரிப்பதற்குத்தான் கட்டணச் சலுகை கேட்கிறோம்.
கேள்வி : இத்தொழிலுக்குப் பரம்பரைப் பயிற்சியா அல்லது இதற்கெனப் பயிற்சி நிறுவனங்கள் ஏதேனும் உள்ளனவா?
பதில் : முதலில் இது குலத்தொழிலாகத்தான் இருந்தது. இப்போது எல்லோரும் இத்தொழிலைச் செய்கிறார்கள். சில இடங்களில் பயிற்சி நிறுவனங்கள் வைத்துக் கற்பிக்கிறார்கள். அவை மும்பை, சென்னை முதலிய இடங்களில் தனியாரால் நடத்தப்படுகின்றன. ஆனால் அதிக அளவில் இல்லை. பெரும்பாலும் பரம்பரைப் பயிற்சியாகவும், பழக்கத்திலும் இத்தொழில் கற்பிக்கப் படுகிறது.
கேள்வி : தற்போதைய தங்க விலையேற்றம் நகைத் தொழிலைப் பாதித்துள்ளதா?
பதில் : விலையேற்றத்தால் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது இருக்கத்தான் செய்யும்.
கேள்வி : உங்கள் சங்கத்தின் சார்பாக அரசிடம் கோரிக்கைகள் ஏதேனும் வைத்துள்ளீர்களா?
பதில் : கிளஸ்டர் அமைப்புக் கேட்டுள்ளோம். அரசாங்கமே பொதுவான தொழிற்பேட்டை ஒன்று அமைத்து அங்கு எல்லா வகை இயந்திரங்களும் நிறுவித் தர வேண்டும். அங்கே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் சென்று இயந்திரங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இதுவரை அத்தொழிற் பேட்டை அமைத்துத் தரப்படவில்லை.
மாற்றுத் தொழில்கள் செய்ய வங்கிக் கடன் வசதி, குடியிருக்க இலவச வீட்டுமனை அல்லது தொகுப்பு வீடுகள் வேண்டுமென்று கேட்டிருந்தோம். எதுவும் கிடைக்கவில்லை.
கேள்வி : மத்திய, மாநில அரசாங்கங்கள் இத்தொழிலுக்குக் கட்டுப்பாடுகள் ஏதேனும் விதித்துள்ளனவா?
பதில் : 1962 இல் தங்கக் கட்டுப்பாடுச் சட்டம் என்ற ஒரு சட்டம் கொண்டு வரப் பட்டது. அதன்படி தங்க நகை செய்ய மத்திய கலால் வரி அலுவலகத்தில் (சென்ட்ரல் எக்சைஸ்) உரிமம் பெற்றுத்தான் வேலை செய்ய வேண்டும் என இருந்தது. அப்போது வியாபாரிகளும் மத்திய அரசிடம் உரிமம் பெற்றே நகை வியாபாரம் செய்ய வேண்டும். திரு. வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது அந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்தத் தொழிலையும், வியாபாரத்தையும் எந்தவிதக் கட்டுப்பாடுகளுமின்றிச் செய்து வருகிறார்கள்.
தங்க நகைகள் மிகவும் விலை உயர்வானவைதான். ஆனால் அவற்றைத் தயாரிக்கும் தொழிலாளர்கள் நிலை மிகவும் தாழ்வாகவே உள்ளதாக திரு. சி. ரங்கராஜன் அவர்கள் தெரிவிக்கிறார். நகை என்ற சொல்லுக்குச் சிரிப்பு என்றும் பொருள் உண்டு. ஆனால், இந்தப் பொன்நகை செய்யும் தொழிலாளர்களுக்கு மட்டும் உதடுகளில் புன்னகை இல்லை. தங்க நகைத் தொழிலாளர்கள் குறைகள் களையப்பட்டால்தான் அவர்கள் உதடுகளில் புன்னகை பூக்கும். நகைத் தொழிலாளர்கள் புன்னகை செய்வது எப்போது?
பேட்டி : இரா. வேணுகோபாலகிருஷ்ணன்
உதவி : இருக்கன்குடி இ. மாரிமுத்து.
கொங்கு முட்டம் குடமுழுக்கு
ஆர்.வி.கொங்கு நாட்டில் ஏழு சிவத்தலங்கள் பாடல் பெற்ற தலங்களாகும். அவை கொங்கேழ் தலங்கள் எனப்படுகின்றன. அவிநாசி, திருமுருகன் பூண்டி, பவானி, திருச்செங்கோடு, வெஞ்சமாக்கூடல், திருப்பாண்டிக்கொடுமுடி, கருவூர் ஆகியன அவை. பேரூர் முதலிய பாடல் வைப்புத் தலங்களும் உள்ளன. பாடல் பெறாத தலங்களாகவும், வைப்புத் தலங்களல்லாததாகவும் இருப்பினும் சிறப்புப் பெற்ற தலங்களாக விளங்கும் கோவில்கள் பல கொங்கு நாட்டில் உள்ளன. மேலும்
அருள்மிகு பஞ்சமுக ஆஞ்சநேயர்
எஸ், ஸ்ரீதுரை.பராக்கிரமம், பலம், பணிவு, பக்தி, பாதசேவை இவை அனைத்தும் இணைந்த ஓர் அற்புத அவதாரம் ஸ்ரீ ஆஞ்சநேயர்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்(று) ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்
என்று கம்பரால் போற்றப்பட்டவர் ஆஞ்சநேயர்.
ஐம்பூதங்களில் ஒன்றான வாயுவின் மகனாகி, இராமபிரானின் கட்டளைக்கு இணங்க சீதாபிராட்டியைத் தேடி தண்ணீர் நிரம்பிய கடல் மீது தாவி, வான்வழியில் பறந்து, பூமியில் (மண்ணில்) பிறப்பெடுத்த அச்சீதா பிராட்டியைக் கண்டுபிடித்து, எதிரி நாடாகிய இலங்கைக்கு நெருப்பு வைத்துவிட்டுத் திரும்பிய வெற்றி வீரர் ஆஞ்சநேயர்.
இவ்வாறு பஞ்சபூதங்களுடன் தொடர்புடைய ஆஞ்சநேயர் பஞ்சேந்திரியங்களை (ஐம்புலன்களை) அடக்கி, பக்தி வழியில் ஈடுபட்ட பெருமைக்குரியவர்.
பக்தியினால் பெற்ற பலத்தினால் பஞ்சமுக உருவம் கொண்டு தான் வணங்கிய பகவானையே பாதுகாத்த பெருமை ஆஞ்சநேயருக்கு உண்டு.
ஸ்ரீராமர் இலங்கையில் யுத்தம் புரியும்போது அவரை வெல்ல முடியாது என்று உணர்ந்த அரக்கர் அரசன் இராவணன், பாதாள உலகை ஆண்ட மஹிராவணன் என்ற மாயாவி அரக்கனின் உதவியை நாடுகிறான்.
தம்முடைய வாலினால் கோட்டை அமைத்து ராமலட்சுமணர்களை ஆஞ்சநேயர் பாதுகாக்க, மாயாவி அரக்கனோ உத்தமன் விபீஷணனின் உருவம் பூண்டு தந்திரமாக அவ்விருவரையும் பாதாள உலகிற்கு அழைத்துச் சென்று விடுகிறான்.
அவனுடைய பெரும்பலம் கருதி, பெரிய திருவடியான ஸ்ரீ கருடன், ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி, ஸ்ரீ வராக மூர்த்தி, ஸ்ரீ ஹயக்ரீவர் (குதிரை முகக் கடவுள்) ஆகியோரின் அருளை வேண்டி, தம்முடைய திருமுகத்துடன் அந்த நால்வரின் திருமுகங்களும் இணைய, பஞ்சமுக ஆஞ்சநேயராகப் பேருருவம் கொண்டு மஹிராவணனை அழித்த ஆஞ்சநேயர் பகவானாகிய ஸ்ரீராமபிரானையும், அவர் தம்பி ஸ்ரீலட்சுமணனையும் பத்திரமாக மீட்டார். பக்தியின் பெருமையைப் பாருக்கு உணர்த்திய வரலாறு இது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ அகோபிலத்தில் ஆஞ்சநேயருக்கு அருளிய ஸ்ரீ காரஞ்ச நரசிம்மர் சன்னதி நாம் அவசியம் சென்று வழிபடத்தக்கது.
தமிழகத்தில் திண்டிவனம்- பாண்டிச்சேரி சாலையில் பஞ்சவடி என்ற திருத்தலத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் திருவுருவம் பெரிய அளவில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகிறது. மேலும் பல திருத்தலங்களில் ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் வழிபாடு நடைபெறுகிறது.
பச்சைமலையில் விநாயகர் திருத்தேர் வெள்ளோட்டம்
கொங்கு நாட்டில் மலைவளம் மிகுதி. குன்றுகள் அதிகம் என்பதால் குன்றுதோறாடும் குறிஞ்சி நிலக் கடவுள் முருகப் பெருமானுக்கு மலைக் கோவில்கள் மிகுதியாக உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தில் நகரின் தெற்குப்புறத்தில் அமைந்துள்ளது பச்சைமலை. பசுமையான அழகிய சிறு குன்று. இந்தக் குன்றின் மீது அமைந்துள்ளது அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்.
குன்றுக் கோயிலில் மேற்கு நோக்கிய நிலையில் முருகப்பெருமான் அழகிய தோற்றத்தில் வீற்றிருந்து அருள் புரிகிறார். கோவிலின் வடகிழக்கு மூலையில் ஆறுமுகங்களுடனும், தென் கிழக்கு மூலையில் வள்ளி தெய்வானையுடனும் தனிச் சன்னதிகளில் வீற்றிருந்து அருள்புரிகிறார்.
இங்கே முருகப்பெருமானுக்கு மரத்தாலான தேரும், தங்கத் தேரும் உள்ளன. பங்குனி உத்திரப் பெருவிழா ஆண்டுதோறும் கொடியேற்றத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தின்போது தேரோட்டம் நடைபெறுகிறது.
தங்கத்தேர் பக்தர்களிடம் கட்டணம் பெற்று ஓட்டப்படுகிறது. சஷ்டி, கிருத்திகை, விசாகம், பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது. பச்சை மலையில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்குத் திருத்தேர் ஒன்று இல்லை என்ற குறை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. தற்போது அருளுள்ளம் கொண்ட பெருமக்களின் நன்கொடையால் அருள்மிகு விநாயகப் பெருமானுக்குத் திருத்தேர் ஒன்று புதிதாகச் செய்யப்பட்டது.
விநாயகப் பெருமானின் புதிய திருத்தேர் வெள்ளோட்ட விழாவும், கோவிலில் பாதுகாப்புப் பெட்டக அறைத் திறப்பு விழாவும் சென்ற டிசம்பர் 4 ஞாயிற்றுக் கிழமையன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு கே.வி. ராமலிங்கம் அவர்கள் கோவிலில் பாதுகாப்புப் பெட்டக அறையைத் திறந்து வைத்தார்.
பின்னர் திருத்தேர் வெள்ளோட்ட விழாத் தொடங்கியது. அமைச்சர்கள் தேர் வடத்தைப் பிடித்து வெள்ளோட்டத்தைத் தொடங்கி வைக்க, பக்தர்கள் தேரை இழுத்தனர்.
விழாவில் சட்டமன்ற, ஊராட்சிமன்றப் பிரதிநிதிகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- ந.நி.
தற்போதைய வெளியீடு





